ஜன.5,6 இல் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை
தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை(ஜன.3,4) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.5,6: கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.