திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு கடந்த 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்களாக 500–க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இந்தப் பணியாளர்களுக்கு மாதம்தோறும் வேலைக்குத் தகுந்தவாறு ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையில் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து, கோவில்வழியில் தங்கியுள்ள தூய்மைப்பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
2 ஆவது முறையாக வேலை நிறுத்தம்: இந்தத் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது தனியார் நிறுவன அதிகாரிகள் ஊதியத்தை வழங்கவதாக உறுதியளித்ததன்பேரில் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர். ஆனால் அதன்பிறகும் ஊதியத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகவே, மாநகராட்சி உயர் அதிகாரிகள் நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.