திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்னாள் மணியம் பி.எஸ்.முத்தாண்டி ஐயர் மனைவி கோட்டை அம்மாள் (வயது 100) வயது முதிர்வு காரணமாக புதன்கிழமை காலை 6 மணியளவில் காலமானார்.
இவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 1984-1989-ம் ஆண்டில் திருச்செந்தூர் பேரூராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது நடந்த திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக மறைந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா அறிவிக்கப்பட்டு தனது முதல் வெற்றிப் பணியை திருச்செந்தூரில் முருகப் பெருமானை தரிசித்து விட்டுத் தொடங்கிட வந்தார்.
அப்போது அவர்களுடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு கோட்டை அம்மாளுக்கு முன்னாள் முதல்வரின் இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நலனுக்காக திருச்செந்தூர் முருகனுக்கு தனது 96 வயதில் அலகு குத்தி, அந்த வேலினை சென்னையில் நேரில் சென்று வழங்கினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வந்த கோட்டை அம்மாள் வயது முதிர்வு காரணமாக புதன்கிழமை காலை காலமானார்.
மறைந்த கோட்டை அம்மாளுக்கு 4 மகன்கள், 2 மகள்கள், 21 பேரன் - பேத்திகள், 28 பூட்டன் - பூட்டிகள், 8 ஒட்டன் - ஓட்டிகள் என 5 தலைமுறை வாரிசுகள் உள்ளனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பரம்பரை கைங்கர்யஸ்தர்களான இக்குடும்பத்தார்களில் ப.தா.கோட்டை மணிகண்டன் கோயில் தக்காராகப் பதவி வகித்தார். தற்போது தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை அவைத் தலைவராகவும் உள்ளார்.