ஓமலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாகப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.
தைப்பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் அதன்படி ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதற்கட்டமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 4ம் தேதி தொடங்கியது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு கட்டங்களாக பொங்கல் பரிசு தொகுப்பு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று தொடங்கியது.
ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சியில் 2-ம் கட்டமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் பாப்பா சின்னையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.எஸ்.கே.ஆர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.இதனை அடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2500 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் பி.பரமசிவம், தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க பிரிவு தலைவர் பி.கே.சின்னையன், ஓமலூர் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற பொருளாளர் திருமுருகன், ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் சிவகுமார், மாணவரணி பொருளாளர் ராஜா, மேற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.