சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நீர் ஆதாரம் பாதிக்காத வகையில் மணல் குவாரி அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அகரஎலத்தூர், மாதிரவேளூர், வடரங்கம் ஆகிய மூன்று கிராமங்களில் 52 ஹெக்டேர் பரப்பளவில் அரசு மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெருவதற்கு முன் பொதுமக்கள் கருத்து கேட்கபட வேண்டும் என்ற விதியின் படி சீர்காழி தனியார் திருமண மண்டபத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மணல் குவாரி அமையவுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். நீர் ஆதாரம் பாதிக்காத வகையில் மணல் எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் மணல் விற்பனை செய்யக்கூடாது, வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அனைத்து கருத்துக்களைப் பதிவு செய்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் கோரிக்கை குறித்து அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.