திருநெல்வேலி: திருநெல்வேலியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு பொங்கலிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கட்டட தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கியது போல் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கிட வேண்டும். திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஆர்டிஓ பெர்மிட் அடிப்படையில் இயங்கும் 11 ஆயிரம் ஆட்டோக்களின் ஓட்டுநர்களுக்கும் வழங்க வேண்டும்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் வாழ்வாதாரம் பாதிப்படைந்த அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். கட்டட தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் உபகரணங்கள் வழங்கியது போல் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கும் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவி, டூல்ஸ்பாக்ஸ் ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பாளையங்கோட்டை திருமால்நகர் பகுதியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலர் ஆர்.மோகன் தலைமை வகித்தார். அலுவலகம் முன்பு மண் பானையில் கரும்பு தோரணங்களுடன் கோரிக்கை முழக்கத்துடன் பொங்கலிட்டனர். ஆட்டோ தொழிற்சங்க முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.