கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறி தொடர்பாக கண்காணிப்பு பணியை அரசு அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கழுவெளி பகுதியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகள் வருவது வழக்கம். அதனால் பறவைக் காய்ச்சல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் உள்ளிட்ட அதிகாரிகள் மரக்காணம் அருகே வண்டிபாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பறவைகள் கண்காணிப்பு பணியை பார்வையிட்டனர்.
தொலைநோக்கி மூலம் பறவைகள் வரத்து, ஏதேனும் பறவைகள் உயிரிழந்து கிடைக்கின்றனவா? என்பதை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து சுற்றியுள்ள கிராமங்களில், பறவைகள் உயிரிழந்து கிடக்கிறதா, பறவைகளுக்கு ஏதேனும் நோய் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க கிராம மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.