ஓமலூர் பகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிக்கனம்பட்டி மற்றும் பல்பாக்கி கிராமங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகள் தொடக்கப்பட்டது. இதில் முன்னதாக பல்பாக்கி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
இதைதொடர்ந்து அங்குள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தபின்னர் பக்தர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் பொங்கல் வழங்கினார். தொடர்ந்து பூமிபூஜைக்கு வருகைதந்த சட்டமன்ற உறுப்பினருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதேபோல் ஆதிதிராவிட நலத்திட்ட நிதியிலிருந்து சிக்கனம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் பேவர்ப்ளாக் சாலை உள்ளிட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சுதா ஐய்யனார், தளபதி, ராஜா, சேகர், சாமிநாதன் உள்ளிட்ட பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.