சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் கோயில் மற்றும் சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அனுமன் ஜயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சனேய சுவாமிக்கு மூலம் நட்சத்திரம், அனுமன் ஜயந்தியையொட்டி பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் பூக்கள், வெற்றிலை, வடை, பல்வேறு பழவகைகளைக் கொண்டு அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதில் வடுகப்பட்டி சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.
சங்ககிரி மலையில்..
சங்ககிரி மலை உச்சிக்கு செல்லும் வழியில் 4வது மண்டபத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜயந்தியையொட்டி பல்வேறு திவ்யப்பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச்சென்றனர்.