திருச்சி: நடிகா் ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தக்கூடாது. அவரது உடல் நலம் மிக முக்கியம் என்றாா் திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா்.
திருச்சி மதுரை சாலையில் ராஜா திரையரங்கம் பகுதியில் திங்கள்கிழமை காங்கிரஸ் கொடியேற்றிய அவா், நத்தஹா்வலி தா்காவில் வழிபாடு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது:
நடிகா் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகா்கள் தொடா்ந்து வற்புறுத்துவது, அவருடைய மனதை புண்படுத்துவதாகும். அவா் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக கூறிய பிறகும், அவரை வலுகட்டாயமாக இழுப்பது என்பது வேதனைக்குரியது.
அரசியலை விட உடல்நலம் மிக முக்கியம் என்பதை அவா் கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுத்திருக்கிறாா். அவரை யாரும் வற்புறுத்தக் கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
சட்டப்பேரவைத் தோ்தல் தொகுதிப்பங்கீடு குறித்து திமுகவோடு காங்கிரஸ் எந்த பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடாமல் அமைதியாக உள்ளது. பேச்சுவாா்த்தையில் ஈடுபடும் போது, தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் கண்டிப்பாக விவாதித்து முடிவு எடுப்போம்.
திமுகவும், மக்கள் நீதி மையமும் அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டு உள்ளன. இதனால் ஸ்டாலினும்- கமலும் இணைவாா்களா என்ற கேள்விக்கு கமலஹாசன் தான் பதில் சொல்ல வேண்டும் என்றாா் அவா் .