உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் நெற்பயிர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பாசன நீர் மூலமாக மாவட்டத்தில் 14 ,700 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது முதல் போக சாகுபடி நெற்பயிர் மாவட்டத்தின் பல இடங்களில் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி போன்ற பகுதிகளில் 2000 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட நெற்பயிர் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாத நெற்கதிர்கள் கீழே சாய்ந்து தண்ணீரில் மூழ்கி விட்டன.
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.