அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரே மேடையில் அமர்ந்தார்.
உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளின் பகுதியாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா திருப்பரங்குன்றம் சாலையில் நடைபெற்று வருகிறது.
இதற்காக புதுதில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை தனி விமானத்தில் புறப்பட்ட காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி மதுரை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்திலும், அவனியாபுரத்திலும் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு ராகுல்காந்தி அழைத்துவரப்பட்டார். அப்போது அங்கு ஏற்கனவே வந்திருந்த உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் கைக்குலுக்கிக் கொண்டனர்.
பின்னர் இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டி குறித்தும், அதன் விதிமுறைகள் குறித்தும் ராகுல்காந்திக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கினார்.
அவர்களுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மேடையில் உடன் இருந்தனர்.