அவிநாசி: அவிநாசியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக, நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, காவல் துறைக்கு விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாய சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் ஆர். குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சியில் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது, விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பது, எண்ணெய் குழாய் அமைப்பது போன்ற பல்வேறு விவசாய விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
மேலும் சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழிற் திட்டங்களுக்கு விவசாயிகள் நிலம் கையகப்படுத்த விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போன்ற விவசாய விரோத சட்டங்களை சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய விவசாயிகள் விரோதப் போக்கை நடத்திக் கொண்டிருக்கும் மாநில அதிமுக அரசு, மத்திய பாஜக அரசு புதிய வேளாண் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு இடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசி வருகிறார்.
இந்நிலையில் தில்லியில் போராடி வரும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறைகூவலை ஏற்று அவிநாசியில் ஜன.13-ம் தேதி புதன்கிழமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வேளாண் திருத்த மசோதாவை கண்டித்து சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் சட்டப்பேரவை தலைவர் தனபால் பொங்கல் தொகுப்பு பொதுவிநியோக கடைகள் மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்க இருந்தபோது, கட்டுக்கடங்காத கூட்டங்கள், பிளக்ஸ் பேனர் வைப்பது, இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் அவிநாசி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதா?.
ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மீது போடப்பட்ட வழக்கினை திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.