காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராஜகுபேரன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கலை முன்னிட்டு 18 பசுக்களுக்கு கோ பூஜை நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.
காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள ராஜகுபேரன் திருக்கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து தீபாராதனைகளும் நடந்தன.
இதனைத் தொடர்ந்து 18 பசுக்களுக்கும் அதன் கன்றுகளுக்கும் ஆலயத்தின் முன்பாக அழைத்து வரப்பட்டு அவற்றுக்கு சந்தனம், குங்கும், திலகமிட்டு மாலைகள் அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.
கோயில் நிர்வாக அறங்காவலர் ராஜகுபேர சித்தர் சுவாமிகள் கோ பூஜைக்கான சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் அனைத்து பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் பொங்கல், பழம் ஆகியனவும் வழங்கப்பட்டது. சதாசிவம் குழுவினரின் இன்னிசைக்கச்சேரியும் நடைபெற்றது.