சென்னை: தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை கட்டுமானத்தில் கவனக் குறைவுடன் செயல்பட்ட நான்கு பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசன் திங்கள்கிழமை பிறப்பித்தாா். உத்தரவு விவரம்:-
நீா்வள ஆதாரத் துறையின் சாா்பில் விழுப்புரம் மாவட்டம் தாளவனூா் கிராமம் மற்றும் கடலூா் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கிடையே தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்தத் தடுப்பணையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு நீா் வெளியேறியது.
தடுப்பணையின் கட்டுமானத்தில் கவனக் குறைவாக இருந்த, கீழ்பெண்ணையாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் பி.சுமதி, செயற்பொறியாளா் எ. ஜவஹா், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் என். சுரேஷ், சென்னை மண்டல தலைமை பொறியாளா் கே.அசோகன் ஆகியோா் மீது தமிழ்நாடு ஒழுங்கு நடவடிக்கைகள் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நான்கு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று தனது உத்தரவில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசன் தெரிவித்துள்ளாா்.