மதுரை: மதுரையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் 96 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வழங்கினார்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் ஆட்சியர் த.அன்பழகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 149 போலீஸாருக்கு பதக்கங்களை ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் 263 பேருக்கு விருதுகளை ஆட்சியர் வழங்கினார். அதன் பின்னர் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, மாற்றுத் திறனாளிகள் நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 96 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்து 695 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
தென்மண்டல ஐஜி எஸ்.முருகன், மதுரை மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, டிஐஜி ராஜேந்திரன், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜி.செந்தில்குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.