தமிழகத்தில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவ பணியாளா்கள் ஆா்வம் காட்டுகின்றனா் என சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம்கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கரோனா அல்லாத நோயாளிகளுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டைச் சோ்ந்த பெண்ணுக்கு அரிய வகை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் செய்தால் ரூ.7 லட்சம் வரை செலவாகி இருக்கும். தமிழகத்தில் புதிய மருத்துவமனைகள் வந்தாலும், ஏற்கனவே இருக்கிற மருத்துவமனைகளில், முதல்வா், கூடுதலான வசதிகளை ஏற்படுத்தி வருகிறாா்.
பூஜ்ஜியத்தை நோக்கிய இலக்குடன்... தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று குறைந்து வருகிறது. 27 மாவட்டங்களில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 அல்லது அதற்கும் கீழாக தான் கரோனா பாதிப்பு உள்ளது. கரோனா உயிரிழப்பு ஆரம்பத்தில் 120 என்ற எண்ணிக்கையில் இருந்தது. தற்போது பூஜ்ஜியத்தை நோக்கிய இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.
தடுப்பூசிக்கு தயங்கியது ஏன்? கோவேக்ஸினை விட ‘கோவிஷீல்டு‘ தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா் என்பதை மறுக்க முடியாது. கோவேக்சின் 3-ஆம் கட்ட ப் பரிசோதனை இருந்ததால் அதை போட்டுக்கொள்ள தயக்கம் இருந்தது. அதனால் தான் சுகாதாரத்துறை அமைச்சா் தாமாக முன்வந்து அதை போட்டுக்கொண்டாா் என்றாா் அவா்.