புது தில்லி: ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு குறித்து மனுதாரர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெற வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று உப்பூர் அனல்மின் நிலையத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 1,600 மெகாவாட் மின் உற்பத்திக்காக 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி, நாகனேந்தல் ஆகிய கிராமப்பகுதிகளை உள்ளடக்கி சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த திட்டத்தை ரூ.12,665 கோடி மதிப்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் மேற்கொண்டது.