புதுச்சேரி அருகே 2 மாதங்களுக்குப் பிறகு கூடிய வாரச்சந்தை
புதுவை மாநிலம் புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இங்கு மாட்டுச்சந்தை பிரசித்தி பெற்றதாகும். இந்த வாரச் சந்தைக்கு புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் விற்பனைக்கு வருவதும், காய்கறி, மளிகை பொருட்கள், பழங்கள் வீடுகளுக்கு தேவையான பொருள்கள், மாடுகளுக்கான அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான கடைகள் சந்தை பகுதியில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆட்சி காலத்திலிருந்து நீண்ட காலமாக பாரம்பரிய சந்தை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக, கடந்த மே மாத தொடக்கத்தில் இந்த மதகடிப்பட்டு வாரச்சந்தை மூடப்பட்டது. இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால், வாரச் சந்தைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இதனை அடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று செவ்வாய்க்கிழமை, மதகடிப்பட்டு வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. வாரச்சந்தையில் மாடுகள் விற்பனைக்கும், காய்கறி, தானியங்கள், கருவாடு, சமையல் பொருட்கள் விற்பனை கடைகள் குவிக்கப்பட்டுள்ளன. வியாபாரிகளும், பொதுமக்களும் காலை முதலே திரண்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.