மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகனுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா நேற்று(புதன்கிழமை) நடைபெற்றது. இதில் 7 பெண் அமைச்சர்கள் உள்பட 43 பேர் அமைச்சராகப் பொறுப்பேற்றனர். 43 பேரில் 15 பேர் கேபினட் அமைச்சர்கள். 28 பேர் இணையமைச்சர்கள்.
தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராகப் பொறுப்பேற்ற அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய இணையமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எல். முருகனுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் சகோதரர் எல். முருகன், மத்திய அமைச்சராக பதவியேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் மக்கள் பணியில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி வழியாக எல். முருகனை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.