மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேக்கேதாட்டு பகுதியில் கட்டாயம் அணை கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா சமீபத்தில் கூறிய நிலையில், இதுதொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, 'மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது' என்று வலியுறுத்தினார்.
அணையைக் கட்ட கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எதிர்க்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.
இந்நிலையில் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் தமிழக சட்டப்பேரவையில் உள்ள 13 கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஈஸ்வரன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.