புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் மூலக்குடியைச் சேர்ந்தவர் நல்லான் மகன் கார்த்திக் (27). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, கார்த்திக் சித்தப்பா முறை.
இதுகுறித்து திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சிறப்பு வழக்குரைஞர் த. அங்கவி ஆஜராகி வாதாடினார்.
வழக்கு விசாரணையின் நிறைவில் புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. உறவுக்கார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றப் பிரிவில் ஓர் ஆயுள் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும், 12 வயதுக்குள்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த குற்றப் பிரிவில் ஓர் ஆயுள் தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே ரூ. 2.50 லட்சம் அரசால் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ரூ. 1.50 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி முனைவர் ஆர். சத்யா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.