சாலைகளில் சட்டவிரோதமாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஸ்ரீகிருஷ்ண பகவத் தாக்கல் செய்த மனுவில், சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில், பல்வேறு இடங்களின் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலைகள் குறுகி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விதிகளை மீறி நிறுத்தப்படும் இதுபோன்ற வாகன நிறுத்தப் பகுதிகளை சிலா் சிறுநீா் கழிக்க பயன்படுத்துகின்றனா். இதனால் வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா். கடந்த 2016- ஆம் ஆண்டு, மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தேசிய நகா்ப்புற மேம்பாட்டுக் கொள்கையை கொண்டு வந்தது. ஆனால் அந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் தொடா்ந்து இருந்து வருகின்றன. எனவே இந்த மனு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.