சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள ஏபிஎன் நினைவு நூலகமும், சங்ககிரி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா நூலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத்தலைவி டி.ஹெலினாகிறிஸ்டோபர் தலைமை வகித்து நூலக வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு தலைப்புகளில் 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை நூலகத்திற்கு இலவசமாக வழங்கிப் பேசினார். பின்னர் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டு வைத்தார்.
அக்கமாபேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
நூலகத்தின் ஆலோசகரும், ஓய்வு பெற்ற ஆசிரியர் முனியப்பன், நூலகத்தின் மேலாளர் பசுமை சீனிவாசன், நூலகர் ஜோதி, ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் கே.செந்தில்குமார், மாவட்ட நிர்வாகி ஏ.வெங்கடேஸ்வர குப்தா, பேரூராட்சி முனனாள் கவுன்சிலர் முருகன், மக்கள் மன்ற நிர்வாகி வெங்கடாஜலம், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி, பசுமை கனகராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.