முன்னாள் முதல்வர் காமராஜரின் 119ஆவது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜரின் 119ஆவது பிறந்த நாள் விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று! ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிட்டிடச் செய்த பெருந்தலைவர்! அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் கழக அரசு என்றென்றும் காமராஜரின் நினைவைப் போற்றும்!” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.