சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் செண்பகராமன், சங்கரலிங்கனார், ஆர்யா (எ) பாஷ்யம் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகள் செண்பகராமன், சங்கரலிங்கனார், ஆர்யா (எ) பாஷ்யம் ஆகியோரின் அருந்தொண்டினைப் போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17ஆம் தேதியைத் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்பட வேண்டுமென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, தியாகிகள் நாள் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
தியாகிகள் நாளை முன்னிட்டுத் தமிழக அரசின் சார்பில், சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவர்களது சிலைகளுக்குக் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படங்களுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை 9.30 மணியளவில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநர்(செய்தி), இணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.