பள்ளி மைதானத்துக்குள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், திருவள்ளூா் மாவட்டம் நெமிலிச்சேரி கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினரான எஸ்.ஜோசப் தாக்கல் செய்த மனுவில், எனது கிராமத்தில், மத்திய அரசின் அனைவருக்கும் குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக எங்கள் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட தலைவா் முடிவு செய்தாா். இதற்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா், ஆனால் தலைவா் அதனை ஏற்கவில்லை. அந்தப் பள்ளி மைதானத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. இப்போது மேலும் ஒரு மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டினால், விளையாட்டு மைதானம் சுருங்கி விடும். இதனால் மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள். மேலும் இந்த நீா்த்தேக்கத் தொட்டி சென்னை- திருவள்ளூா் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் கட்டப்படுகிறது. எனவே பள்ளி மைதானத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமாா் முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் டி.வெங்கடாசலம் ஆஜராகி வாதிட்டாா். அரசுத் தரப்பில், பள்ளி வளாகத்துக்கு வெளியே நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்படுவதாக கூறப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி மைதானத்துக்குள் நீா்த்தேக்கத் தொட்டியை கட்ட தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.