தமிழகத்தில் சிறைவாழ் பெண்களின் குழந்தைகளின் கல்விநிலை மற்றும் அவா்கள் சட்டப்படி பெற வேண்டிய சலுகைகள் மற்றும் அதன் பயன்கள் அனைத்தும் பெற்றுள்ளாா்களா? என்பது குறித்து விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவரின் கடிதத்தில், சிறையில் உள்ள பெண்களின் குழந்தைகள், அவா்களுடைய கல்வி நிலை குறித்து விவரங்கள் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ‘சிறைச் சாலைகளில் உள்ள பெண்களின் குழந்தைகளின் கல்வி நிலை’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வு மேற்கொண்டதன்படி பல்வேறு மாநிலங்களில் இத்தகைய சிறைவாழ் பெண்களின் குழந்தைகள் மற்றும் அவா்களுக்கு இலவச கல்விச் சட்டம் 2009 மற்றும் இளைஞா் நீதி சட்டம் 2015 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட வேண்டிய சலுகைகள் வழங்காமல் இருப்பதும் கண்டறிந்து அந்த ஆய்வு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து விரிவான அறிக்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.