குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தில்லி புறப்பட்டார்.
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து தமிழக அரசு, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்னதாக, முதல்வர் ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து கோரிக்கை வைத்திருந்தார். மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி குழுவும் தில்லி சென்று கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காகதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தில்லி புறப்பட்டார். இன்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து தில்லி செல்லும் அவர் நாளை பிற்பகல் குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கிறார்.
மேக்கேதாட்டு அணை, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகவும், சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு அழைக்க விருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் குடியரசுத் தலைவர் - முதல்வர் ஸ்டாலின் சந்திப்புக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
முதல்வராகப் பதவியேற்றபின் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத்தலைவருடனான முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.