சங்ககரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் சங்ககிரியில் நகர்ப் பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலையோரம் வசித்து வந்த ஒரு பெண் உள்பட இருவரை ஈரோடு தனியார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளையின் சார்பில் சங்ககிரி, சங்ககிரி ஆர்.எஸ். சங்ககிரி மேற்கு, வைகுந்தம், கொங்கணாபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வசித்து வரும் ஆதரவற்ற ஏழைகளுக்கு கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக அரசு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட மே 10 ஆம் தேதி முதல் தினசரி உணவுகளை வழங்கி வருகின்றனர்.
அதனையடுத்து வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை உணவு கொடுப்பதற்காக சங்ககிரி பவானி பிரதானசாலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் செல்லும்போது கடந்த சில மாதங்களாக அங்கிருந்த ஒரு பெண் உள்பட இருவரை கவனித்துள்ளனர்.
அதனையடுத்து அவர்களை விசாரித்தபோது அப்பெண்ணின் பெயர் சாவித்திரி என்பதும் அவர் மனநிலம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மற்றொருவர் சக்திவேல் லாரி ஓட்டுநராக இருந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து சங்ககிரி காவல்துறை உதவியோடு அமுதச்சுடர் அறக்கட்டளைத் தலைவர் சத்யபிரகாஸ் தலைமையில் நிர்வாகிகள் மணிகண்டன், அஜித், சிவபாலா, நவீன்குமார் ஆகியோர் ஈரோடு அட்சயம் அறக்கட்டளையினரை தொடர்பு கொண்டுள்ளனர். அந்த அறக்கட்டளையின் நிர்வாகி வி.பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் தினேஷ், கிருபா, நந்தினி, சரண்யா, கார்த்திக், ஆனந்த், சுரேஷ் சங்ககிரி வந்து இருவரையும் காப்பகத்தில் சேர்ப்பதற்காக மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். சங்ககிரி அமுதச்சுடர் அறக்கட்டளையின் இளைஞர்களின் சேவையை சங்ககிரியைச் சேர்ந்த ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.