திருப்பூர்: கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஊத்துக்குளி பெண் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர் கா.கலாவதி(50), இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
இதனிடையே, கடந்த ஒரு வாரத்துக்கும் முன்பாக கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிக்குறிகள் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, திருப்பூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.