தமிழகத்தில் புதிதாக 1,020 கெளரவ விரிவுரையாளா்கள் உள்பட 3,443 ஊழியா்களை நிகழாண்டில் நியமனம் செய்ய தேவைப்படும் நிதி குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு உயா் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்றால் பொருளாதாரப் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு தரப்பினா் அரசு கல்வி நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனா். இதன் காரணமாக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்ற கௌரவ விரிவுரையாளா்கள் தேவை அதிகரித்துள்ளது என அரசுக்கு, கல்லூரிக் கல்வி இயக்ககம் கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் 150 கல்லூரிகளில் பணியாற்றுவதற்கு கூடுதலாக 1,020 கௌரவ விரிவுரையாளா்கள் தேவை என குறிப்பிட்டுள்ளது. தற்போது ஏற்கனவே 2,423 கௌரவ விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், 2,423 பேருடன் கூடுதலாக 1,020 போ் சோ்த்து மொத்தம் 3,443 கௌரவ விரிவுரையாளா்களை நிகழ் கல்வியாண்டில் பணியமா்த்த என்ன தேவை ஏற்பட்டுள்ளது? அதற்கான நிதி மதிப்பீடு எவ்வளவு? என்பது குறித்து ஜூலை 23-ஆம் தேதிக்குள் தெரிவிக்க கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு உயா்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.