அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சியை அடுத்த பூலாங்கால் கிராமத்தில் திங்கள்கிழமை பிற்பகல் மனநிலை சரியில்லாத பெண் தாக்கியதில் மற்றொரு பெண் தலைக்காயம் ஏற்பட்டு பலியானார்.
பூலாங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா(54). இவர் திருமணமாகாதவர். அங்குள்ள பால்வாடியில் ஆயாவாக வேலை செய்துவருகிறார். இவர் திங்கள்கிழமை பிற்பகலில் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றபோது, அம்மருத்துவமனையில் பூலாங்காலைச் சேர்ந்த அசனம்மாள்(55) என்கிற மனநிலை சரியில்லாத பெண்ணுடன் வாய்த்தகராறு ஏற்பட்டதாம். பின்னர் மருத்துவம் பார்த்த பின்னர் தனது ஊருக்கு வந்த சரோஜா, அசனம்மாளின் வீட்டிற்கே சென்று மீண்டும் வாய்த்தகராறில் ஈடுபட்டாராம். இதில் ஆத்திரமடைந்த அசனம்மாள் சட்டென கையில் கிடைத்த பொருளைக்கொண்டு சரோஜாவின் தலையில் பலமாகத் தாக்கித் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சட்டென மயங்கிச்சாய்ந்த சரோஜாவை அக்கம்பக்கத்தார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்த பரளச்சி காவல்துறையினரின் விசாரணையில் அசனம்மாள் என்பவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்களுண்டு எனவும், கணவர் இப்ராஹிம் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டநிலையில் மகன்கள் இருவரும் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாகவும், இதனால் அசனம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார் என்பதும் தெரிய வந்ததாம்.
அசனம்மாள் மனநிலை சரியில்லாதவர் என்பதால் காவல்துறை விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனினும் அசனம்மாளை செவ்வாய்க்கிழமை கைது செய்து பரளச்சி காவல்துறையினர் சிறையிலடைத்தனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.