வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் பல இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தொற்று தடுப்புப் பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டார்.
வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கடைவீதியில் கோழி ரசம் (சூப்) தயாரிக்கும் கடையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து 3 நாள்களுக்கு அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, கள்ளிமேடு உள்ளிட்ட சில கிராமங்களில் தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.
இந்த நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர், கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென்னம்புலம் கடைவீதியில் தடுப்புப் பணிகளை பார்த்தார்.
வடமழை மணக்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தடுப்பூசி போடும் மையத்துக்குச் சென்றார். அங்கு மருத்துவக் குழுவினர் காலத்தில் வராதது தெரியவந்தது. பின்னர் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டார்.