வால்பாறையில் கரடி தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி இரண்டாம் டிவிஷனை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் வசந்த் பிரபாகர்(22). இவர் நேற்றிரவு 10.30 மணி அளவில் தேயிலை தோட்டத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியில் குட்டியுடன் வந்த கரடி பிரபாகரை தாக்கியதோடு வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
இதனை கண்ட வசந்தின் நண்பர்கள் கரடியை கற்களைக்கொண்டு தாக்கியுள்ளனர்.
இதன்காரணமாக வசந்தை விடுவித்த கரடி வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த வசந்தை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கரடி தாக்கி இரண்டு நாள்களுக்கு முன் இளைஞர் ஒருவர் பலியான நிலையில், மேலும் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.