மின்கட்டணப் புகார் தொடர்பாகத் தனிக்கவனம் செலுத்திக் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் ஏ செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஏ.செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்து மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர்/பகிர்மானம் எம்.செந்தில்வேல் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, பொதுமக்கள் புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கட்டணப் புகார் தொடர்பாகத் தனிக்கவனம் செலுத்திக் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். முதலமைச்சரின் உத்தரவின்படி வெளிப்படைத் தன்மையுடன் அனைத்துப் புகார்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்நுகர்வோரின் புகார்களைச் சரிசெய்யும் போதும், மின் இணைப்பு கொடுக்கும் போதும், மின்கம்பங்கள் தேவையான பொருட்கள் ஆகியவற்றை எடுத்துவர மின் நுகர்வோரின் செலவில் வாகன வாடகை மற்றும் பணியாளர்களுக்கான ஊதியத்தையோ வாங்கக் கூடாது. இதுகுறித்துப் புகார் எழுந்தால், விழிப்புப்பணிக் குழு பார்வையிட்டு, அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்படட்ட அலுவலர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையத்தில் இன்று தற்போதுவரை 1,71,344 எண்ணிக்கையில் புகார்கள் வரப்பட்டுள்ளன. அதில் 1,59,186 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்பட்டது. இதில் 12,158 புகார்கள் நடவடிக்கைகளில் உள்ளன.