திருவள்ளூர்: சேவாலயா அறக்கட்டளை சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நவீன ஆம்புலன்ஸ் வாகனம், கரோனாவால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு அரிசி, மளிகை தொகுப்புகள், முன்களப்பணியாளர்களுக்கு தற்காப்பு உபகரணங்கள் ஆகியவைகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் சேவாலயா அறக்கட்டளை மற்றும் தனியார் நிறுவனம் பங்களிப்புடன் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்று கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 113 குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை பொருள்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட முன்களப்பணியாளர்களுக்கு உபகரணங்களையும் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் பயன்பெறும் வகையில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் கூடிய அனைத்து நவீன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சேவாலயா அறக்கட்டளையின் நிர்வாக முரளிதரன் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை துணைத்தலைவர் கிங்ஸ்டன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி, துணைக்குழு தலைவர் எம்.பர்கத்துல்லாகான், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜூ, ஊராட்சி தலைவர் பக்தவத்சலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.