கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுக்க செயல்பட்டுவரும் காந்தி உலக மையத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, இயற்கை ஆக்சிஜனை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் சிறு வனம் நிறுவும் விழா நடைபெற்றது.
இயற்கையிலேயே மரங்களில் உள்ள ஆக்சிஜன், மரங்களை வெட்டுவதும் மூலமாக குறைகிறது. இதனை கருத்தில் கொண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் இயற்கை ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் எனப்படும் சிறு வனம் அமைக்கும் நிகழ்வு காந்தி உலகமயத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன் கோவில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காந்தி உலக மையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு காந்தி உலக மையத்தின் நிறுவன தலைவர் எம்.எல்.ராஜேஷ் தலைமை தாங்கினார். புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன், துணை தலைவர் எல்லப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறு வனம் அமைக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்ட திரைப்பட நடிகர் தாமு.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட நடிகர் தாமு, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், டிஎஸ்பி ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று இயற்கை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை எனப்படும் சிறு வனம் அமைக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்வில் பேசிய காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை ஆக்சிஜனை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் சிறு வனம் அமைத்து அதனை பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் குறிப்பிட்ட பகுதியில் நிழல் தரும் 10-30 மரக்கன்றுகள் நடப்படும் என்றவர், பொதுமக்கள் அவரவர் வீடுகளில் காலி இடம் இருந்தால் அதில் இயற்கை ஆக்சிஜன் தொழிற்சாலை எனப்படும் சிறு வனத்தை அமைக்க விருப்பம் தெரிவித்தால் காந்தி உலக மையத்தினர் அங்கு வந்து மரக்கன்றுகள் நட்டு வேலி அமைத்து தருவார்கள் என்று கூறினார்.