சென்னை: கோயில் நிலங்கள் குறித்த விவரங்களை இணையத்தில் வெளியிடுவதுபோல பஞ்சமி நிலம் பற்றிய விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று சமூக சமத்துவப் படைக் கட்சியின் தலைவா் ப.சிவகாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களை மீட்பதில் கடந்த சில நாள்களாக சிறப்பாகச் செயல்பட்டு வருவதை அறிந்து மகிழ்ச்சி. முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆணையை ஏற்று, அந்தத் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆக்கிரமிப்பில் உள்ள நான்கு லட்சம் ஏக்கா் கோயில் நிலங்களைப் பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளாா்.
அதேவேளையில், பஞ்சமி நிலத்தை மீட்க அதிமுக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் பஞ்சமி நிலம் பற்றிய விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடவில்லை என்பதையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை இணையதளத்தில் வெளியிடுவது போல் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலம் பற்றிய விவரங்களையும் வெளியிடுவதோடு ஏற்கெனவே அரசிடம் அளிக்கப்பட்டுள்ள பஞ்சமி நில மீட்பு வரைவு மசோதாவையும் சட்டமாக இயற்ற வேண்டும்.
மேலும், பஞ்சமி நில மீட்பு ஆணையத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்க வேண்டும்.