கரோனா நிதியாக தங்கச் சங்கிலி வழங்கிய ஏழை பெண்: அரசு வேலைக்கு நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரோனா நிவாரண நிதிக்காக தனது கழுத்து தங்கச் சங்கிலியை வழங்கிய ஏழை பட்டதாரி பெண் சௌமியாவுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரோனா நிவாரண நிதிக்காக தனது கழுத்து தங்கச் சங்கிலியை வழங்கிய ஏழை பட்டதாரி பெண் சௌமியாவுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேட்டூரை சேர்ந்த செளமியா என்ற ஏழை பட்டதாரி பெண், தனக்கு வேலைக்கேட்டு அளித்த மனுவுடன் கரோனா நிதிக்காக தனது கழுத்து  தங்கச் செயின் 2 பவுனையும், முதல்வரிடம் கொடுத்துள்ளார். அதற்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின்,பொன்மகளுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என என சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன்12) சென்றபோது, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களில் ஏழை கல்லூரி மாணவி சௌமியா அளித்த கடிதத்தைப் படித்துப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் நெஞ்சம் நெகிழ்ந்தார். மேலும் அவரது கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

கல்லூரி மாணவி சௌமியா அளித்த கடிதத்தின் விவரம் வருமாறு: 
"என்னிடம் பணம் இல்லாததால் கரோனா நிதித்தொகையாக என கழுத்திலிருந்து 2 பவுன் செயினை நிதியாகக் கொடுக்க விரும்புகிறேன்"

"இரா. சௌமியா ஆகிய நான் பி.இ. கணினி அறிவியல்  பட்டதாரி, எனது தந்தை ஆவின் ஓய்வு பெற்ற பணியாளர்.என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகள் இரண்டு பேர் இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. எனது தந்தை பணியில் இருந்து பெற்ற சம்பளத்தொகை அனைத்தையும் எங்களை படிக்க வைக்கவும் சகோதரிகளுக்கு திருமணம் செய்யவும் செலவு செய்து விட்டார். நாங்கள் மூன்று பெண்களும் பட்டதாரிகள் ஆனால், வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.எனது தந்தை பணி ஓய்வு பெற்று வந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 12 .03 .2020 அன்று இறந்து விட்டார்கள்.

எனது தந்தை பணி ஓய்வுப் பெற்ற சேமிப்பு தொகை அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்து விட்டார். அம்மாவை காப்பாற்ற முடியவில்லை, மருத்துவச்செலவு (சுமார் 13 லட்சம்) ஆகிவிட்டது. எங்களுக்கு சொந்தவீடு கிடையாது. ஆகையால், அம்மா இறந்த பிறகு மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்து விட்டு தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கி உள்ளோம் . எங்கள் ஆதார் விலாசம் எல்லாமே (30A காவேரி நகர், என்றுதான் உள்ளது) எனது தந்தைக்கு பணி ஓய்வு தொகையாக ரூபாய் 7000/-(ஏழாயிரம்) மட்டும் கிடைக்கிறது.

வீட்டு வாகை ரூபாய் 3000/- (மூவாயிரம்) போக ரூ.4000/- (நாலாயிரம்) வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். திருமணமாகிய எனது சகோதரிகள் எங்களுக்கு உதவி செய்கின்ற வசதிவாய்ப்பு அவர்களுக்கு இல்லை. 

ஆகையால், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலை வாய்ப்பை வாங்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன்.எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்", என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அந்த பெண்ணிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க.  ஸ்டாலின் அவர்கள், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com