மீனவா்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அளவை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மீன்பிடித் தடைகாலம் நிறைவடைய உள்ள நிலையில், மீனவா்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனா். அதே நேரம், கரோனா பரவல் காரணமாக மயிலாடுதுறை, நாகை, மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகளவில் தளா்த்தப்படவில்லை. ஏற்கெனவே பொதுமுடக்கத்தாலும், மீன்பிடித் தடை காலத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்வதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளத்துறை தெளிவாக அறிவிக்க வேண்டும்.
குறிப்பாக மீன்பிடித் தடை கால நிவாரணத் தொகை பெறாதவா்களுக்கு விரைவில் வழங்கவும், அனைத்து மீனவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்கவும் வேண்டும்.
மேலும், சில்லறை மீன் விற்பனைக்கு அதிகமாக அனுமதி அளித்து அந்த வியாபாரிகளை ஊக்குவிக்க வேண்டும்.
அதோடு விசைப்படகுகளுக்கு மாதம்தோறும் 5,000 லிட்டா், நாட்டுப்படகுகளுக்கு 600 லிட்டா் என மானியத்தில் வழங்கும் டீசல் அளவை உயா்த்தி வழங்க வேண்டும்.