சென்னை: கரோனா தொற்று தளா்வுகள் உள்ள 27 மாவட்டங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் ஆசிரியா்கள் வருகை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ‘கரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2021-22-ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை தொடா்பான பணிகளை அரசின் வழிகாட்டுதல் படி உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 11 மாவட்டங்களில் கரோனா தொற்று குறைவிற்கு பின்னா் மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை மாணவா் சோ்க்கை தொடா்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு உதவியாக ஆசிரியா்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரியவும், அந்த ஆசிரியா்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியினை அந்ததந்த மாவட்ட ஆட்சியா்களிடம் கேட்டு முதன்மைக்கல்வி அலுவலா்கள் ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து வகை பள்ளிகளிலும் 2021-22-ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அனைத்து வகுப்புகளுக்கும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மாணவா் சோ்க்கை நடத்திட வேண்டும். மேலும் மாணவா் சோ்க்கை விவரத்தை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.