அவிநாசி: முதல்வர் 100 நாள் குறைதீர் திட்டமான 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் அவிநாசி தொகுதியில் முதற்கட்டமாக செம்பியநல்லூரில் திட்டப்பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூர் ஊராட்சி எஸ். மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்கக்கோரி முதல்வர் 100 நாள் குறைதீர் திட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து செம்பியநல்லூர் ஊராட்சி எஸ்.மேட்டுப்பாளையத்தில் ரூ. 5.71 லட்சத்தில் வடிகால் வசதியும், நாதம்பாளையம் பகுதியில் ரூ.8.15 லட்சத்தில் கான்கிரீட் சாலை என மொத்தம் ரூ.13.86 லட்சத்தில் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வேல்முருகன், துணைத் தலைவர் தனலட்சுமி தங்கவேல், உறுப்பினர் கௌரி சிட்டிபாபு, திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஈ.ப.சிவபிரகாஷ், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல்வர் 100 நாள் திட்டத்தில் கோரிக்கை மனு அளித்து, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டதையடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.