மணப்பாறையில் முறையான குடிநீர் விநியோகம் இல்லை எனக்கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு விடத்திலாம்பட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 1-வது வார்டுக்குள்பட்ட விடத்திலாம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் அளிக்கப்படவில்லை.
மேலும், அப்பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை, சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே கிடப்பில் இருப்பதால் மக்கள் அவதியுற்று வருவதாகவும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும், அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் சமரசம் செய்து குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தித் தருவதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.