தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் இயற்கை மற்றும் பொது நல ஆர்வலர் கே.கே. சண்முகம் (73) இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் பொது நல மக்கள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, தம்மம்பட்டியில் கேஸ் ஏஜென்சி அமைக்க வலியுறுத்தி, சுற்றுவட்டாரத்திலுள்ள 15க்கும் மேற்பட்ட ஊர்களில் கேஸ் இணைப்பு பெற்ற 5 ஆயிரம் பேரிடம் வீடு வீடாகச் சென்று கையெழுத்து இயக்கம் நடத்தி இவர் அனுப்பிய மனு அடிப்படையில் கேஸ் ஏஜென்சி ஏற்படுத்தினார்.
அதன் மூலம் தம்மம்பட்டி பகுதி மக்களுக்கு, பல நாள் காத்திராமல் உடனடியாக கேஸ் சிலிண்டர்கள் கிடைத்தது. அதே போல் தம்மம்பட்டி பகுதி மக்கள் நான்கு ஆயிரம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அதன் பயனாக தம்மம்பட்டியில் முதன்முறையாக ஸ்டேட் பாங்க் கிளை துவக்கப்பட்டது. மேலும், ஆன்மீக விஞ்ஞான குடில் அமைப்பை ஏற்படுத்தி தம்மம்பட்டி சுற்றுவட்டாரத்தில் இதுவரை 5,100 மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார்.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்து, ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவர், வெள்ளிக்கிழமை முற்பகல் தம்மம்பட்டி சிவன் கோவில் அருகே உள்ள ஜெயம் நகரில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.