புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கரோனா தடுப்பூசி தொடர்பான உயர்நிலை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பல்வேறு பரிந்துரைகளை ஆளுநரிடன் அளித்துள்ளார். அதில், பள்ளிகளை தற்காலிகமாக மூட துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.
மேலும் புதுச்சேரி பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பவர்கள், வாக்காளர்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் மார்ச் 22 முதல் மே 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதேசமயம் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் வாரத்தில் 5 நாள்கள் செயல்வடும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.