விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையின் போது அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி. சண்முகம், திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன் ஆகியோர் அருகருகே அமர்ந்து வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்றனர்.
விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை சனிக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கியது. தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 36 பேரின் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸ் வேட்புமனுக்களை பரிசீலனை மேற்கொண்டார்.
இதில், அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வேட்புமனுவும், திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன் வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து மற்ற வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
வேட்பு மனு பரிசீலனைக்கு வந்த அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகம், திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் கைகளை கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொண்டதுடன், அருகருகே அமர்ந்து வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.