சென்னை: சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,985 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 466 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 387 பேரும் கோடம்பாக்கத்தில் 316 பேரும் அண்ணாநகரில் 338 பேரும் ராயபுரத்தில் 298 பேரும் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
இதுபோலவே மற்ற மண்டலங்களிலும் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது, அம்பத்தூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 232 ஆகவும் திருவிக நகரில் 241 ஆகவும், வளசரவாக்கத்தில் 209 ஆகவும் உள்ளது.
மார்ச் மாதத் தொடக்கம் வரை கரோனா பாதிப்பு மெல்ல குறைந்த வந்த நிலையில், முதல் வாரத்தில் அந்த நிலைமை தலைகீழானது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, அனைத்து மண்டலங்களிலும் 200-க்கும் குறைவாகவே கரோனா நோயாளிகள் இருந்த நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு கோடம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில மண்டலங்களில் பாதிப்பு 200க்கும் அதிகமாக உயர்ந்து, தேனாம்பேட்டையில் 400 நெருங்குகிறது.
இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,41,623 ஆக உள்ளது. அவர்களில் 2,34,441 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 4,197 பேர் கரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.
மார்ச் மாதத்தில் கரோனா தொற்றுப் பரவல் எவ்வாறு படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது என்பதை இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தாலே புரியும்.
மார்ச் 21: 466
மார்ச் 20: 458
மார்ச் 19: 421
மார்ச் 17: 395
மார்ச் 16: 352
மார்ச் 15: 317
மார்ச் 14: 294
மார்ச் 13: 271
மார்ச் 11: 292
மார்ச் 10: 275
மார்ச் 09: 236
மார்ச் 08: 229
மார்ச் 07: 251
மார்ச் 05: 225
மார்ச் 04: 189
மார்ச் 01: 171
தமிழகத்திலும் கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கை 7,903 ஆக அதிரித்துள்ளது. நேற்று புதிதாக 1,289 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.