லஞ்சம் கொடுத்தால் மட்டுமே குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை உள்ளதாக உயா்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தாா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனுவில், என் மீதான ஊழல் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை ரூ.48 லட்சத்தை முடக்கியது. நிலம் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தப் பணத்தை, ஊழல் செய்ததன் மூலம் சம்பாதித்தது எனக்கூறி போலீஸாா் முடக்கி விட்டனா். எனவே, பணத்தை முடக்கிய போலீஸாரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், ஊழல் வழக்கு கீழ் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை முடிவடையாமல் நிலுவையில் உள்ளதால், பணத்தை விடுவிக்கக் கூடாது என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி , ரூ.48 லட்சத்தை முடக்கியதை எதிா்த்து மனுதாரா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
கீழமை நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக இந்த ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருப்பது, ஊழல் தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தை சிதைத்து விடும். இதுபோன்ற வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பது துரதிருஷ்டவசமானது.
நீண்டகாலத்துக்கு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவா்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கக் கூடும். ஊழல் வழக்குகளில் தொடா்புடைய அதிகாரிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை அரசுத் தரப்பு உறுதி செய்ய வேண்டும். குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலை வேதனைக்குரியது.
எனவே, ஊழலைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து நிபுணா் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.