சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வி.கே.சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார். மேலும் எந்தவொரு கருத்துக் கணிப்பும் கட்சியின் வெற்றியைப் பாதிக்காது என்று கூறினார்.
வியாழக்கிழமை சென்னை ராயபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் ஜெயகுமார், " அதிமுகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு உள்ளது. எந்தவொரு கருத்துக் கணிப்பும் அதிமுகவின் வெற்றியை பாதிக்காது" என்று கூறினார்.
"வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காக நாங்கள் ஒருபோதும் பணம் அளிக்கவில்லை. எனது ஆதரவாளர்கள் என்னுடன் கடுமையான வெயிலில் பிரசாரம் செய்து வருகிறார்கள்," என்று கூறினார்.
மேலும் சசிகலா மீது எந்த வருத்தமும் இல்லை. தற்போதுள்ள அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டால் அவரை கட்சியில் சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கட்சியின் ஒருப்பிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ஜெயகுமார் பதிலளிக்கையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறியதன் மீது கருத்துசொல்ல இயலாது. ஆனால், "எனது நிலைப்பாடு கட்சியின் நிலைப்பாட்டைப் போன்றது, சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை" என்றார்.
எங்கள் கூட்டணி "தமிழகத்தில் அதிக வாக்குகளுடன் பெரும்பான்மை தொகுதியை வெல்லும்" என்று ஜெயகுமார் கூறினார்.